சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே குன்றக்குடி ஆதினத்திற்குட்பட்ட சதுர்வேதமங்கலம் ஆத்மநாயகி அம்பாள் உடனுறை ருத்ர கோடீஸ்வரர் கோயில் மாசி மகத்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் மண்டகப்படியாக நடக்கும் இத்திருவிழாவின் முதல் நாளான நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10:30 மணியளவில் காப்பு கட்டப்பட்டு ரிஷப வாகனத்தில் கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கும் காப்பு கட்டப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாலை 5:00 மணிக்கு அரவங்கிரி எனும் அரளிப்பாறைக்கு தண்டாயுதபாணி புறப்பாடு நடந்தது. திருவிழாவின் ஒவ்வொரு நாளும் சுவாமியும், அம்பாளும் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி அருளிபாலிப்பர். ஐந்தாம் நாளான மார்.24 ம் தேதி காலை 10:30 மணியில் இருந்து 11:11 மணிக்குள் ஆத்மநாயகி அம்பாள் ருத்ர கோடீஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. 25 ம் தேதி இரவு கழுவன் திருவிழாவும், 28ம் தேதி மாலை 4:30 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. 10 ம் திருவிழாவான மார்ச்.1 ம் தேதி காலை 9:00 மணியவில் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு அரளிப்பாறை என்னும் அரவங்கிரியில் தீர்த்தவாரி நடக்கிறது. அன்றைய தினமே அரளிப்பாறை மஞ்சுவிரட்டும் நடக்கிறது.