பதிவு செய்த நாள்
21
பிப்
2018
01:02
மதுரை, ”இறைவனிடம் நம்மை பேச வைப்பது இசை மட்டுமே,” என மதுரையில் நடந்த தமிழிசை சங்க ஆண்டு விழாவில், தஞ்சாவூர் தமிழ் பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன் பேசினார். தமிழிசை சங்க ஆண்டு விழா நேற்று துவங்கியது. தேவகி முத்தையா துவக்கி வைத்தார். தலைவர் ஏ.சி.,முத்தையா வரவேற்றார். வருமான வரித்துறை முதன்மை கமிஷனர் கணேசன், அறங்காவலர் மோகன்காந்தி, பொருளாளர் சோமசுந்தரம் பங்கேற்றனர். துணைவேந்தர் பாஸ்கரன் பேசியதாவது: வாழ்க்கையை செயல்படுத்த உதவுவது மொழி. பண்பாட்டின் அடிப்படை கூறாக இருப்பது கலை. கலையில் ஒன்று தான் இசை. இவை தான் ஆண்டவனிடம் நம்மை பேச செய்யும். உடல், மனம், செயலில் துாய்மை இருத்தல் வேண்டும். அப்போது தான் இறைவனை அடைய முடியும். தமிழ் இசையை வளர்ப்பதில் பெரும் பங்கினை மதுரை தமிழ் இசை சங்கம் செயல்படுத்தி வருகிறது, என்றார். விழாவில், நாதஸ்வர வித்வான் சேஷம்பட்டி சிவலிங்கத்திற்கு ’முத்தமிழ் பேரறிஞர்’ பட்டமும், பொற்கிழியும் வழங்கப்பட்டது. செயலாளர் சொக்கலிங்கம் நன்றி கூறினார். தமிழிசை சங்க ஆண்டு விழாவை முன்னிட்டு மார்ச் 1 ம் தேதி வரை தினமும் மாலை 5:15 மணிக்கு இன்னிசை, நாடகம், குரலிசை, நாட்டிய நாடகம், வாத்திய இசை நடைபெறும்.