பதிவு செய்த நாள்
22
பிப்
2018
10:02
திருப்போரூர்: ராகு - கேது பரிகார தலமாக, மேலையூர் நாகபரணீஸ்வரர் கோவில் விளங்குகிறது. திருப்போரூர் அடுத்த மேலையூரில், சோழற்கால பெருமை உடைய, நாகபரணீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள இறைபெருமான் நாகபரணீஸ்வரர், தாயார் பெரிய நாயகி, நடராஜருக்கு சன்னதிகள் உள்ளன.
வரலாற்று சிறப்பை உணர்த்தும் விதத்தில், ராகு கேதுவால், நிலவை விழுங்கும் படம், கல் சிற்பத்தை காண முடிகிறது. சிதிலமடைந்த கோவிலில், 15 ஆண்டுகளுக்கு முன் திருப்பணி துவங்கப்பட்டது. அப்போது, கோவில் நிலவரையில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலைகள் கிடைத்தன. இதையடுத்து, கோவிலில் திருப்பணி முடித்து, கொடிமரம் நடப்பட்டு, கும்பாபிஷேக வைபவமும் நடந்தது. பக்தர்கள் உபயத்தில் அன்னதானமும், கிருத்திகை, சஷ்டி, பிரதோஷம், பவுர்ணமி உள்ளிட்ட நாள்களில் சிறப்பு வழிபாடும் நடத்தப்படுகிறது. ராகு - கேது தோஷம் உள்ளோர் இக்கோவிலில் வழிபட்டால், திருமண தடை நீங்குவதோடு, குழந்தைபேறு, தீராத நோய்களும் குணமடைவதாக, பக்தர்கள் நம்புகின்றனர். திருப்போரூரிலிருந்து செங்கல்பட்டு சாலையில், வெங்கூரிலிருந்து, 4 கி.மீ., தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.