வடவள்ளி: மருதமலை கோவில் படிக்கட்டுகளில் செயல்பட்டு வந்த கடைகள், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று அகற்றப்பட்டன. மதுரை மீனாட்சியம்மன் கோவிலை ஒட்டிய கடையில், கடந்த பிப்., 2ம் தே தி தீவிபத்து ஏற்பட்டது. தீ பரவி, கோவிலின் கிழக்கு கோபுரபகுதி சேதமடைந்தது. இதையடுத்து, மதுரை உயர்நீதிமன்றம், தமிழகம் முழுவதுமுள்ள கோவில்களின் அருகேயுள்ள கடைகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து மருதமலை கோவிலின் படிக்கட்டுகளில் செயல்பட்டுவந்த கடைகளை, அறநிலையத்துறையினர் நேற்று அகற்றினர். கடைகளில் பணியாற்றுவோர் பக்தர்களை அழைத்து பொருள் வாங்க நிர்பந்திப்பர். கடைகள் அகற்றப்பட்டதால் எந்த இடையூறுமின்றி பக்தர்கள் படி ஏறிச் சென்று சுவாமியை தரிசித்தனர். தற்போது மருதமலையில் அன்னதானக்கூடத்தின் அருகில், மூன்று பஞ்சாமிர்தக்கடைகள் மட்டுமே உள்ளன.