பதிவு செய்த நாள்
22
பிப்
2018
12:02
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, கோவை புத்துணர்வு முகாமை முடித்துக்கொண்டு நேற்று புதுச்சேரி திரும்பியது. தமிழக கோவில்களில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக, அறநிலையத்துறை சார்பில், 2003ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது. கோவை மாவட்டம், தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் நடத்தப்படும் முகாமில், யானைகளுக்கு நடைபயிற்சி, ஊட்டச்சத்து உணவு, மருத்துவ பரிசோதனை, வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு புத்துணர்வு முகாம், கடந்த மாதம் 4ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் (பிப்., 20ம் தேதி) முடிவடைந்தது. இம்முகாமிற்கு புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, கடந்த மாதம் 3ம் தேதி புறப்பட்டுச் சென்றது. கால்நடை மருத்துவர் செல்வராஜ், பாகன் கள் இருவர் உடன் சென்றனர். புத்துணர்வு முகாமை முடித்துக்கொண்டு நேற்று காலை, யானை லட்சுமி புதுச்சேரி வந்தது. கடற்கரை சாலையில், லாரியில் இருந்து இறக்கப்பட்ட யானை, மிகுந்து புத்துணர்ச்சியுடன், கம்பீரமாக நடந்து கோவிலை வந்தடைந்தது. கோவிலில், மூலவர் மணக்குள விநாயகரை வணங்கிய யானை லட்சுமி, கோவிலை வலம் வந்தது. கோவிலில், யானைக்கு மாலை மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 48 நாட்களாக கோவிலில் யானை இல்லாததால் ஏமாற்றத்தில் இருந்த பக்தர்கள், யானை லட்சுமியை பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்து, ஆசி பெற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன், அறங்காவல் குழு செயலாளர் பரசுராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காரைக்கால்: அதே போன்று, திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவில் யானை பிரக்குருதி, கோவை தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் பங்கேற்றுவிட்டு நேற்று அதிகாலை திரும்பியது. யானைக்கு கோவில் நிர்வாகம் சார்பில், வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக முகாமிக்கு சென்று வந்த யானை கோவில் குளத்தில் ஆனந்த குளியல் போட்டது.