பதிவு செய்த நாள்
23
பிப்
2018
12:02
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீ வீரராகவப்பெருமாள் கோவிலில், அரசு பொதுத் தேர்வை மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், மிகுந்த நினைவாற்றலுடன் எதிர்கொள்ள , ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவர் பூஜை, நாளை மறுநாள் (25ம் தேதி) நடக்கிறது. அரசு பொது தேர்வு எழுதும் மாணவர்கள், மிகுந்த நினைவாற்றலுடனும், தன்னம்பிக்கையுடனும் தேர்வை எதிர்கொள்ளவும், நல்ல மதிப்பெண் பெறவும் பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள, ஸ்ரீ லட்சுமி ஹயக்கிரீவருக்கு, ஆண்டு தோறும் திருவடி திருத்தொண்டு அறக்கட்டளை சார்பில், சிறப்பு யாக பூஜைகள் நடத்தப்படுகிறது.
இந்தாண்டு, அரசு பொது தேர்வு, எழுதும் மாணவர்களுக்கு, சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. கடந்த இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் பூஜை நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். ஆன்மீகத்தோடு, தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், சிறப்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை மறு நாள், (25ம் தேதி), பிளஸ்-1, பிளஸ்-2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர் நலனுக்காக சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. அன்றைய தினம், காலை, 9:00 மணிக்கு சிறப்பு ஹோமம்; 10:30 மணிக்கு மூலவர் திருமஞ்சனம்; 11:00 மணிக்கு, திவ்ய நாம சங்கீர்த்தனம்; 11:30க்கு, சாத்துமறை மற்றும் மகா தீபாராதனை; 12:00 க்கு, பிரசாத வினியோகம் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த பூஜையில், பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் பெயர், நட்சத்திரங்களுக்குடன் தனித்தனியாக, அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்நிகழ்வின், கடைசி வாரம் என்பதால், பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியர், தங்களது பெற்றோர்களுடன் பங்கேற்கலாம்.