பதிவு செய்த நாள்
27
பிப்
2018
12:02
திருப்போரூர் : கந்தசுவாமி கோவில், பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான நேற்று, திருத்தேரோட்டம் வெகுவிமரிசையாக நடை பெற்றது. திருப்போரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கந்த சுவாமி கோவிலில், ஆண்டு தோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா, 20ம் தேதி கொடியேற்றத்துடன், கோலாகலமாக துவங்கியது. முக்கிய நிகழ்வான ரதோற்சவம் நேற்று, 7ம் நாள் உற்சவமாக நடைபெற்றது. காலை, 5:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் தேர் மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் கந்தசுவாமி பெருமானுக்கு சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன. பின், 6:55 மணிக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, பக்தர்களின், அரோகரா கோஷம் விண்னைப் பிளக்க, தேரானது நிலையிலிருந்து புறப்பட்டு, மாட வீதிகளில் வலம் வந்தது. அப்போது, வீதியெங்கும் குவிந்திருந்த பக்தர்கள் கந்தசுவாமி பெருமானுக்கு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். பின், 1:30 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. மாடவீதியை சுற்றிலும், ஆங்காங்கே பக்தர்களுக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டன. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்