பதிவு செய்த நாள்
27
பிப்
2018
12:02
காஞ்சிபுரம் : காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவத்தில் நேற்று, ரதத்தில் அம்மன் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் பிரம்மோற்சவம், 20ல் துவங்கியது. தினமும் காலை, இரவு வெவ்வேறு வாகனங்களில் காமாட்சி அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று காலை,5:30 மணிக்கு அம்மன் ரதத்தில் எழுந்தருளினார். காலை, 9:15 மணிக்கு வாகன மண்டபத்தில் இருந்து ரதம் புறப்பட்டு, ராஜ வீதிகளில் வலம் வந்து சங்கர மடம் சென்றடைந்தது. அம்மன் ரதம், சங்கர மடம் முன், பக்தர்கள் தரிசனத்திற்காக நிறுத்தப்பட்டது. மாலை, 5:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கோவிலை அடைந்தது. ரத உற்சவத்தை முன்னிட்டு, நேற்று காலை, 9:00 மணிக்கு மேல் மாலை, 5:30 மணி வரை தரிசனம் நிறுத்தப்பட்டது. கோவிலை அம்மன் சென்றடைந்ததும் மீண்டும் வழக்கம் போல் மூலவர் தரிசனம் நடைபெற்றது.