பதிவு செய்த நாள்
27
பிப்
2018
01:02
தென்னேரி : தென்னேரி தெப்போற்சவம், நேற்று முன் தினம் இரவு, கோலாகலமாக நடந்தது. தென்னேரி கிராமத்தில், ஆண்டுதோறும் தாதசமுத்திர தெப்போற்சவம் நடக்கும். நடப்பாண்டு, தெப்போற்சவத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம், காஞ்சி புரம் வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் கண்ணாடி பல்லக்கில், தென்னேரி கிராமத்திற்கு எழுந்தருளினார். அங்கிருந்து அயிமிச்சேரி, நாவிட்டான்குளம், திருவங்கரணை, குண்ணவாக்கம், மலையடிவாரம், அகரம் ஆகிய கிராமங்களில் திருவீதி உலா சென்றார். இரவு, 9:30 மணிக்கு, தென்னேரி மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு அவருக்கு, சிறப்பு திருமஞ்சன அபிஷேகம், மலர் அலங்காரம் செய்யப்பட்டது. மேள தாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டு முழங்க, பல்லக்கில் புறப்பட்டு, தென்னேரி ஏரியில், அலங்கரிக்கப்பட்டிருந்த மேடையில் எழுந்தருளினார். ஏரி கரையில் காத்திருந்த கிராமவாசிகள், காஞ்சி வரதராஜப்பெருமாளை நினைத்து, தீப, துாபங்கள் ஏற்றி ’கோவிந்தா...கோவிந்தா...’ என, பக்தி கோஷம் எழுப்பி வழிபட்டனர்.