பதிவு செய்த நாள்
27
பிப்
2018
01:02
சென்னிமலை: சென்னிமலை அருகே, செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, வேத மந்திரங்கள் முழங்க, நேற்று காலை கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சென்னிமலை அடுத்துள்ள முருங்கத்தொழுவு கிராமத்தில், மிக பழமையானதும், பிரசித்தி பெற்றதுமான, செல்லியம்மன் கோவில் உள்ளது. கோவில் புதுப்பிக்கப்பட்டு, கல்காரகத்தில் கருவறை அமைக்கப்பட்டு அர்த்தமண்டபம், மகா மண்டபம், மூலவர் கோபுரம் உள்ளிட்டவை, அற்புதமான சிற்ப வேலைப்பாடுகளுடன் திருப்பணி செய்யப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேக பூஜைகள் கடந்த, 24ல் துவங்கின. சாந்தி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு மங்கள இசை, நிறை வேள்வி நடந்தது. கலசங்களை ஏந்திச் சென்ற சிவாச்சாரியார்கள், 6:55 மணிக்கு, மூலவர் கோபுரம், பரிவார தெய்வங்களின் கோபுரங்களுக்கு, ஏக காலத்தில் வேத மந்திரங்கள் முழங்க, கும்பாபிஷேகம் செய்தனர். பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. 8:00 மணிக்கு, மூலவர் செல்லி அம்மனுக்கு புனித நீரால், கும்பாபிஷேகம் நடந்தது.