பதிவு செய்த நாள்
27
பிப்
2018
01:02
ஈரோடு: ஈரோடு, பெரிய மாரியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில்களான பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன் மற்றும் காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா மார்ச், 20 இரவு, 9:00 மணியளவில் பூச்சாட்டுதலுடன் துவங்குகிறது. பெரியமாரியம்மன் கோவிலில், பிரமாண்டமான பந்தல் அமைப்பதற்கான, பந்தக்கால் நடும் விழா நேற்று காலை நடந்தது. கோவில் செயல் அலுவலர் ரமணிகந்தன் வரவேற்றார். மார்ச், 24ல் பட்டாளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், கம்பம் நடுதல் இரவு, 10:30 மணிக்கும், 29 மாலை, 5:00 மணிக்கு கொடியேற்றமும் நடக்கிறது. ஏப்ரல், 3 காலை, காரைவாய்க்கால் மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா, இரவு, 9:00 மணிக்கு மாவிளக்கு எடுத்தல், கரகம், பெரிய மாரியம்மன் விசஷே அலங்காரத்துடன் வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்ரல், 4ல் பொங்கல், சின்ன மாரியம்மன் கோவிலில் இருந்து தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. ஏப்ரல், 5 இரவு பெரியமாரியம்மன், மலர் பல்லக்கில் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. 7 அன்று மூன்று கோவில் கம்பங்களும் ஊர்வலமாக காரை வாய்க்காலுக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. 8 அன்று மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
செயல் அலுவலர் ரமணி கந்தன் கூறியதாவது: சத்தியமங்கலத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் பூபதி, பந்தல் போடும் கான்ட்ராக்ட் எடுத்துள்ளார். 41 கோவில் கடைகள் அமைக்கப்படும். இதற்கான ஏலம் வரும், 28ல் நடக்கிறது. பந்தல், கடைகள் 40 நாட்களுக்கு இருக்கும். அக்னி சட்டியை பத்திரமாக வைக்க, கோவில் அருகே சிறிய அறை ஏற்படுத்தப்படும். கோவில் விழா அமைதியாக நடைபெற வேண்டும் என்பதற்காக, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடக்கிறது. அம்மனுக்கு பூஜை செய்த பின், பந்தக் கால் நடப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.