பழநி: மாசித்திருவிழாவை முன்னிட்டு, பழநி மாரியம்மன் கோயிலில் கேரள மாநில பக்தர்கள் அக்னிசட்டிகள் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பலநுாறு ஆண்டுகளுக்கு முன் பழநியில் இருந்து கேரளாவிற்கு சென்ற பக்தர்கள், ஒவ்வொரு ஆண்டும் பழநி மாரியம்மன் கோயில் மாசித் திருவிழாவில் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாண்டு மாசித்திருவிழாவில் கேரளமாநிலம் பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கன்னுார், கர்நாடக மாநிலம் குடகு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழநி வந்தனர். வையாபுரிகுளம் அருகேயுள்ள படிப்பாறை காளியம்மன் கோயிலில் இருந்து அக்னிச்சட்டிகள் எடுத்து வந்து மாரியம்மன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தி, அம்மனை வழிபட்டனர். இதேபோல பழநி 18கிராம மக்கள் பால்குடங்கள், அக்னி சட்டிகள் எடுத்து வந்தனர். வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில், பாதவிநாயகர் கோயிலில் இருந்து பூச்சொரிதல் ரதஊர்வலம் நடந்தது.