பதிவு செய்த நாள்
05
மார்
2018
01:03
சென்னை, சிதம்பரேஸ்வரர் கோவிலை, புனரமைக்க கோரி, அறநிலையதுறையிடம், பக்தர்கள் மனு அளித்தனர். சென்னை சூளையில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த, சென்னை, சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் போலவே, சென்னையில், ஆகாயத்தலமாக, இந்த கோவில் கட்டப்பட்டது. இக்கோவில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.சிதம்பரம் நடராஜர் கோவிலில் செய்யப்படுவது போலவே, இந்த கோவிலிலும், ஸ்படிக லிங்கத்திற்கு, பூஜை செய்யப்படுகிறது. அங்கு போலவே, பிரம்மோற்சவம் மற்றும் ஆனி திருமஞ்சனம் செய்யப்படுகிறது. ஆகமவிதிப்படி, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தவேண்டும். ஆனால், இந்த கோவிலில், 1986க்கு பின், இதுவரை கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.அதனால், கோவிலின் ராஜ கோபுரம், நவக்கிரக மண்டபம், கோவில் முகப்பு, எட்டு கல் துாண்கள் உள்ளிட்டவை சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளன.
இது குறித்து, நமது நாளிதழில், சில மாதங்களுக்கு முன் செய்தி வெளியானது. இதையடுத்து, அந்த கோவிலை ஆய்வு செய்த, அறநிலையத்துறை அதிகாரிகள், ’விரைவில், புனரமைப்பு பணிகள் துவங்கும்’ என, பக்தர்களிடம் கூறினர்.இந்நிலையில், பக்தர்கள் சிலர், அறநிலையத்துறை உதவி ஆணையரை சந்தித்து, ’கோவில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. உடனே, புனரமைப்பு பணியை துவங்க வேண்டும்’ என, கோரிக்கை விடுத்தனர்.
- -நமது நிருபர்-