பதிவு செய்த நாள்
12
மார்
2018
01:03
அனுமந்தபுரம் : அனுமந்தபுரம் அகோர வீரபத்திரர் கோவில், காதணி விழாவிற்கு, 16 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கி, நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு அடுத்த, அனுமந்தபுரம் கிராமத்தில், புகழ்பெற்ற, அகோர வீரபத்திரர் கோவில், இக்கோவில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.இங்கு வேண்டுதலுக்காக, தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.விழாக்காலங்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில், ஞாயிறு மற்றும் முக்கிய நாட்களில், குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த ஏராளமானோர் வருகின்றனர். அப்போது, தனியார் திருமண மண்டபத்தை அதிக கட்டணத்தில் வாடகைக்கு எடுக்க வேண்டிய சூழல் உள்ளது. ஒரு சிலர், கோவில் வளாகத்திலேயே காதணி விழாக்களை நடத்தி வந்தனர். இதனால், பக்தர்களுக்கும், விழா நடத்துபவர்களுக்கும், சிரமம் ஏற்பட்டு வந்தது. இதையடுத்து, காதணி விழா நடத்த, தனியாக மண்டபம் கட்ட வேண்டும் என, பக்தர்கள், கோவில் நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.இந்நிலையில், மண்ணி வாக்கத்தைச் சேர்ந்த ரத்தினவேல் என்ற பக்தர், காதணி விழா நடத்துவதற்கு, தன் சொந்த செலவில் மண்டபம் கட்டி தருவதாக, கோவில் செயல் அலுவலரிடம், விண்ணப்பம் அளித்தார். இங்கு, கட்டடம் கட்ட, கோவில் நிர்வாகம் அனுமதி அளித்தது. அதைத்தொடர்ந்து, 16 லட்சம் ரூபாய் மதிப்பில், காதணி விழா நடத்துவதற்கு, கோவில் வளாகத்தில், புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கி, நடைபெற்று வருகிறது. இப்பணிகள், ஆறு மாதத்தில் முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது.