பதிவு செய்த நாள்
15
மார்
2018
11:03
ஆனைமலை : இந்து அறநிலையத்துறை இணையதளத்தில், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு, ’டிஜிட்டல்’ சேவை துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், காணிக்கை, நன்கொடை மற்றும் வழிபாடுக்கு முன்பதிவு செய்து கொள்ளும் வசதிகளை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்து அறநிலையத்துறை இணையதளத்தில், ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்காக பக்கம் துவங்கப்பட்டுள்ளது. இதனை, www.anaimalaimasaniamman.tnhrce.in என்னும் இணையதளத்தில் காணலாம். இந்த இணையதளத்தில் வழங்கப்படும் சேவைகளை பொதுமக்கள், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
இணையதளத்தில் வரலாறு என்னும் இடத்தை தேர்வு செய்து பொதுமக்கள், மாசாணியம்மன் கோவிலின் தல வரலாறு, திருவிழாக்கள் குறித்த விபரங்களை தெரிந்து கொள்ளலாம். அதேபோல், இணையதளத்தில் பூஜைகள் என்னும் இடத்தை தேர்வு செய்தால், அன்றாடம் கோவிலின் நடை திறப்பு, அபிஷேகம், உச்சிகால பூஜை, சாயரட்சை பூஜை, நடை சாத்துவது உள்ளிட்ட நேரங்களை தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி அர்ச்சனை, தங்கமலர் அர்ச்சனை, வெள்ளி மலர் அர்ச்சனை, காதுகுத்துதல், தங்கரத கட்டணம், முடிகாணிக்கை உள்பட பல்வேறு வழிபாட்டு கட்டண விபரங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு நேரடியாக வர இயலாத பக்தர்கள், வீட்டில் இருந்தபடியே அன்னதானம், பூஜை, காணிக்கை உள்ளிட்டவையை, ’ஆன் - லைனில்’ செலுத்த இந்து சமய அறநிலைத்துறை வசதி ஏற்படுத்தியுள்ளது.
மாசாணியம்மன் கோவிலுக்கான இணையதளத்தின் முகப்பு பகுதியிலுள்ள ’இ - டொனேஷன்’ என்ற பகுதியை தேர்வு செய்தால், அன்னதானம் மற்றும் பொது காணிக்கைக்கு பக்தர்கள் பணம் செலுத்தலாம். எடுத்துக்காட்டாக பொது காணிக்கையை தேர்வு செய்தால், அதில் பெயர், முகவரி, தொலைபேசி எண் மற்றும் செலுத்த விரும்பும் தொகையை தேர்வு செய்து, வங்கி கணக்கு மூலம், ’ஆன் லைனில்’ பணம் செலுத்தலாம். மேலும், ’இ - புக்கிங்’ என்ற பகுதியை தேர்வு செய்து, பூஜை, தங்கரதம் உள்ளிட்டவைக்கு, ’ஆன் லைன்’ மூலம் பணம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், தொடர்புகள் என்ற பகுதியை தேர்வு செய்தால், பக்தர்கள், ’கூகுள் மேப்’ வாயிலாக கோவில் அமைந்துள்ள இடம், வழித்தடம், பஸ், ரயில் மற்றும் விமான வழிகள் குறித்த தகவல்களை தெரிந்துகொள்ளலாம். கோவில் அலுவலக போன் எண்ணும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இந்த சேவைகள் மூலம், டிஜிட்டல் முறையில் காணிக்கை செலுத்துதல், தரிசனம் மற்றும் வழிபாட்டுக்கு முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்றனர் கோவில் நிர்வாகத்தினர்.