காரைக்குடி, காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் பால்குட விழாவை முன்னிட்டு, பக்தர்கள் முத்தாலம்மன் கோயிலிலிருந்து பால்குடம் எடுத்து நேர்த்திக் கடனை தொடங்குவார்கள். முன்னதாக முத்தாலம்மன் கோயில் குளத்தில் மூழ்கி குளிப்பார்கள். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு குளம் துார்வாரப்பட்டு, சுற்றிலும் கம்பி வேலி அமைக்கப்பட்டு, பைப் மூலம் ஷவர் அமைக்கப்பட்டிருந்தது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காரைக்குடியை சேர்ந்த கருப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் குளத்தை பக்தர்களின் வசதிக்காக பயன்படுத்த அனுமதிக்க வேண்டும், என உத்தரவிடப்பட்டது. அதன் அடிப்படையில் கோயில் குளம் கடந்த 13ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பை கருத்தில் கொண்டு படிக்கட்டிலிருந்து குளம் அமைந்திருக்கும் பகுதியில் 20 அடி வரை தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனம், நீச்சல் வீரர்கள், 108 ஆம்புலன்ஸ் ஆகியவை 18ம் தேதி முதல் 21ம் தேதி வரை நிறுத்தி வைக்கப்பட உள்ளது. செயல் அலுவலர் அகிலாண்டேஸ்வர் கூறும்போது: முத்தாலம்மன் கோயில் குளம் பக்தர்களின் வசதிக்காக, உயர்நீதிமன்ற உத்தரவின்படி திறக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் நெரிசல் இன்றி பாதுகாப்பாக இதில் குளித்து, நேர்த்திக்கடனை செலுத்த வேண்டும், என்றார்.