பதிவு செய்த நாள்
19
மார்
2018
12:03
மேல்மருவத்துார்: மேல் மருவத்துார் சித்தர் பீடத்தில், யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பு விழா, நேற்று கொண்டாடப்பட்டது. அதிகாலை, 3:00 மணிக்கு, மங்கள இசையுடன், ஆதிபராசக்தி அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
காலை, 10:00 மணிக்கு, பங்காரு அடிகளார் கோவில் வந்தார். தொடர்ந்து, ஆந்திரா, தெலுங்கானா பக்தர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், தலைமையில் நடந்தது. பங்காரு அடிகளார், அன்னையின் அருள் வாக்கு எனும் தெலுங்கு மொழி புத்தகத்தை வெளியிட, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர்கள் அன்பழகன், ஸ்ரீதேவி ரமேஷ் ஆகியோர் பெற்றனர். அதன் பின், 40 பேருக்கு தையல் இயந்திரம், பள்ளி கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உட்பட, ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆதிபராசக்தி அன்னை இல்லத்திற்கு, ஒரு லட்சம் ரூபாயும், ஆதிபராசக்தி மருத்துவமனைக்கு, 2 லட்சம் ரூபாய் மதிப்பு மருந்து பொருட்களையும், பக்தர்கள் வழங்கினர்.