கீழக்கரை: திருப்புல்லாணியில் இருந்து பிரப்பன் வலசை செல்லும் ராணி மங்கம்மாள் சாலையோரத்தில் உள்ள பழமையான கோட்டம் சிதிலமடைந்துள்ளது. வரலாற்றுச்சின்னங்களின் எச்சமாக உள்ள பழமையான சிறிய கட்டபனைமரங்களுக்கிடையேயும் மறைந்து வருகிறது.
உத்தரகோசமங்கையில் இருந்து திருப்புல்லாணி, சேதுக்கரைக்கு செல்லும் யாத்ரீகர்கள், தினைக்குளம் வழியாக ரெகுநாதபுரம், தாமரைக்குளம், பிரப்பன் வலசை வழியாக ராமேஸ்வரம் செல்வதற்காக பக்தர்கள் முன்பு கால்நடையாகவும், குதிரை மற்றும் மாட்டு வண்டியிலும் பயணம் செய்துள்ளனர். வழித்தடங்களில் ஓய்வு எடுக்கவும், சிறு தெய்வங்களை வழிபட்டு செல்வதற்கு வசதியாகவும் கோட்டங்களை நிறுவியுள்ளனர். திருப்புல்லாணியை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் கே.ஞானசேகர் கூறியதாவது; ராணி மங்கம்மாள் சாலையோரத்தில் சிறு தெய்வங்களுக்கான வழிபாட்டு கோட்டமாக 7 அடி உயரத்திலும், 3 அடி அகலத்திலும் உள்ள கட்டடம் 300 ஆண்டு பழமை வாய்ந்ததாகும். முன்பு இதன் வழியாக செல்லும் வழிப் போக்கர்களுக்கு வெளிச்சம் தரும் வகையில் எண்ணெய் விளக்கு ஏற்றப்பட்டுள்ளது. காலப்போக்கில் இக்கட்டடம் பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து, வரலாற்றின் எச்சத்தின் மிச்சமாக உள்ளது. எனவே ராமநாதபுரம் தொல்லியல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தால், மேலும் பல அரிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது, என்றார்.