பதிவு செய்த நாள்
20
மார்
2018
11:03
சென்னை: ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தின் ஜீயர், ரங்க ராமானுஜ தேசிகர், உடல் நலக்குறைவால் நேற்று சென்னையில் முக்தியடைந்தார்.ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஆசிரமத்தின் பீடாதிபதி, ரங்க ராமானுஜ தேசிகர், 84, உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, நேற்று மதியம், 1:00 மணிக்கு காலமானார்.மருத்துவமனையில் இருந்து, அவரது உடல், ஆழ்வார்பேட்டையில் உள்ள, ஆண்டவன் சுவாமி கள் ஆசிரமத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, திரண்டிருந்த பக்தர்கள், இறுதி மரியாதை செலுத்தினர். நேற்று மாலை, அவரது உடல் ஸ்ரீரங்கத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.ஸ்ரீரங்கம் ஆசிரமத்தில், பொதுமக்கள், பக்தர்கள் பார்வைக்கு, ஜீயரின் உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு, இன்று இறுதி சடங்குகள் நடக்க உள்ளன. ஆண்டவன் சுவாமிகள் காலமானதைத் தொடர்ந்து, புதிய மடாதிபதியாக, ஸ்ரீகாரியம் வடுவூர் சுவாமிகள் பொறுப்பேற்க உள்ளார்.
பரிச்சயம் மிக்கவர் : அன்றைய தென் ஆற்காடு மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊரில், 1935, மே 20ல், ஸ்ரீநிவாசாச்சாரியார் - குமுதவல்லிக்கு மகனாக பிறந்தார் வராஹன். சென்னை, காகுமானி ஆதிகேசவலு செட்டி அறக்கட்டளை பாடசாலையிலும், மதுராந்தகம் அகோபில மடம் சமஸ்கிருத கல்லுாரியிலும் கல்வி பயின்றார்.பின், ஸ்ரீபெரும்புதுாரில், தமிழ் வித்வானாகவும் தேர்ச்சி பெற்றார். செங்கல் பட்டு அரசு பள்ளியில் பணிபுரிந்த இவர், 1960ல் திருமணம் செய்தார். இவருக்கு, ஐந்து மகன்களும், இரு மகள்களும் பிறந்தனர். சிறுவயதிலேயே வேதம், திவ்ய பிரபந்தங்களை கற்றுத் தேர்ந்த வராஹாச்சாரியார், சங்கீதத்திலும் வல்லவராக திகழ்ந்தார்.
11வது பீடாதிபதி : ஆந்திர மாநிலம், ஐதராபாதில் உள்ள சமஸ்கிருத கல்லுாரியில், பணிபுரிந்த போது, தெலுங்கு மொழியையும் கற்று தேர்ந்தார். தமிழ் பண்டிதரான இவர், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலத்திலும் பரிச்சயம் மிக்கவராக இருந்தார்.அரசு பள்ளிகளில், 27 ஆண்டுகள் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்த இவர், 54வது வயதில், திருக்குடந்தை ஸ்ரீமத் ஆண்டவன் நியமனப்படி, பெரிய ஆசிரமத்தின், 11வது பீடாதிபதியானார்.இவர் பீடாதிபதியான பின், கோசாலைகளை நிறுவி, நுாற்றுக்கணக்கான பசுக்களை பராமரிக்க ஏற்பாடு செய்தார்.மந்த்ர சாஸ்திரம், ஆகம சாஸ்திரம் ஆகியவற்றில் சிறந்தவராக இருந்த இவர், 10 வேதபாட சாலைகளை நிறுவி, சமய மரபை வளர்ப்பதற்கும், பாதுகாப்பதற்கும் உறுதுணையாக இருந்தார். கடந்த, 1996ல், ஐந்து துறைகளில், 77 மாணவர்களுடன், ஸ்ரீரங்கத்தில் துவங்கப்பட்ட ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லுாரி, தற்போது, 16 துறைகளுடன், 4,000 மாணவர்களுடன், சிறப்பாக செயல்பட்டு வருகிறது.