பதிவு செய்த நாள்
02
ஜன
2012
12:01
திருநெல்வேலி:நெல்லையப்பர் கோயிலில் பக்தர் பேரவை சார்பில் 11ம் ஆண்டு மகா ம்ருத்யுஞ்ஜய ஜப வேள்வி கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஹிந்து ஆலய பாதுகாப்பு குழுவின் நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் பக்தர் பேரவை சார்பில் ஆண்டுதோறும் மகா ம்ருத்யுஞ்ஜய ஜப வேள்வி நடத்தப்பட்டு வருகிறது. 11வது ஆண்டாக இந்த ஆண்டு மகா ம்ருத்யுஞ்ஜய ஜப வேள்வி நேற்று நெல்லையப்பர் சுவாமி சன்னதியில் நடந்தது. காலையில் கணபதி பூஜை, கும்ப பூஜை, மகா ம்ருத்யுஞ்ஜய ஜப ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து நெல்லையப்பர், காந்திமதியம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேக, அலங்கார, தீபாராதனை நடந்தது. மகா ம்ருத்யுஞ்ஜய ஜப வேள்வியை தெற்கு மடம் வித்யா சங்கர சிவாச்சாரியார் நடத்திவைத்தார்.
பின்னர் மகா ம்ருத்யுஞ்ஜய ஜப மந்திரத்தை பக்தர்கள் பாரயணம் செய்தனர். காலை 9 மணிக்கு துவங்கிய மந்திர வேள்வி மதியம் வரை நடந்தது.
இதில் நெல்லையப்பர் பக்தர் பேரவையினர், நெல்லை ஜங்ஷன் கைலாசநாதர் கோயில் பக்தர் பேரவை, பாளை., ராஜகோபால சுவாமி கோயில் பக்தர் பேரவை, பேட்டை பால்வண்ணநாத சுவாமி பக்தர் பேரவை, தச்சநல்லூர் வரம்தரும் பெருமாள் பக்தர் பேரவை மற்றும் அரியகுளம் சாரதா பள்ளி மாணவிகள், கல்லூரி மாணவிகள், சிவபக்தர்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மகா ம்ருத்யுஞ்ஜய ஜப மந்திரத்தை பாராயணம் செய்தனர்.பூஜையில் சுவாமி சங்கரானந்தா, நெல்லையப்பர் பக்தர் பேரவையின் மாநில அமைப்புச் செயலாளர் சுதாகர், நிறுவன அமைப்பாளர் அருணாசலம், மாநில செயலாளர் சங்கரநாராயணன், அமைப்பாளர் குணசீலன், சாரதா கல்லூரி அம்பாஜி யதீஸ்வரி சரவணப்பிரியா துணை அமைப்பாளர்கள் ராமையா, சுப்பிரமணியன், திருஞானசம்பந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை நெல்லையப்பர் காந்திமதியம்பாள் பக்தர் பேரவையினர் செய்திருந்தனர்.குவிந்த பக்தர்கள்ஜனவரி மாதம் முதல் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆண்டுதோறும் மிருத்யுஞ் ஜய ஜப வேள்வி நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியன்று ஞாயிற்றுக் கிழமை வந்ததால் ம்ருத்யுஞ்ஜய ஜப வேள்வியில் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர். ஏராளமான பெண்கள் கோயில் கொடி மரத்தின் முன்பு நெய் விளக்கேற்றி வழிபட்டனர்.மேலும் ஆங்கில புத்தாண்டு என்பதாலும் கோயிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்ததால் கோயிலுக்குள் செல்வதற்கு பக்தர்களிடையே நெருக்கடி ஏற்பட்டது.