பதிவு செய்த நாள்
22
மார்
2018
10:03
நாகர்கோவில்: -கொல்லங்கோடு, பங்குனி பரணி துாக்கத்திருவிழாவில், 1,547 குழந்தைகளுக்கு, துாக்க நேர்ச்சை நடத்தப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு, பத்திரகாளி அம்மன் கோவிலில் குழந்தை வரம் வேண்டியும், ஆரோக்கியமான வாழ்வு வேண்டியும், பெற்றோர், தங்கள் குழந்தைகளை துாக்கமரத்தில் ஏற்றுவதாக, வேண்டுகின்றனர்.
இரண்டு சக்கரங்கள் கொண்ட வண்டியில், இரண்டு துாக்க மரம் வைக்கப்பட்டு, அதில் நான்கு வில்கள் கட்டப்பட்டிருக்கும். துாக்க காரர்கள் துணியால் இந்த வில்லில் கட்டப்படுவர். பின்னர், அவர்கள் நேர்ச்சை குழந்தைகளை கையில் தாங்கியதும், துாக்கமரம் மேலே உயரும். இந்த வண்டியை, பக்தர்கள் இழுத்து கோவிலை வலம் வருவர்.இதற்கான விழா, கடந்த, 12-ல், துவங்கியது. விழாவை, கவர்னர் பன்வாரிலால் புரோஹித் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார் .விழாவின், 10-ம் நாளான நேற்று, காலை, 6:00 மணிக்கு, துாக்கம் தொடங்கியது. மொத்தம் 1,547 குழந்தைகளுக்கு, நள்ளிரவு வரை துாக்க நேர்ச்சை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.