பதிவு செய்த நாள்
22
மார்
2018
10:03
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. கோயில் யானை தெய்வானை மீது கொடிப்பட்டம் வைத்து ரத வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டு கொடிக்கம்பத்தில் கட்டப்பட்டது.சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை கொடிக்கம்பம் முன் எழுந்தருளினர்.
சிவாச்சார்யார்கள் பங்குனித் திருவிழாவிற்கான கொடியேற்றினர். கம்பத்தின் அடிப்பகுதியில், பால் உள்ளிட்ட திரவிய அபிஷேகங்கள் முடிந்து தீபாராதனைகள் நடந்தது. விழா நடக்கும் ஏப்., 4 வரை காலையில் தங்கச்சப்பரம், தங்கபல்லக்கு, இரவில் தங்கமயில், தங்கக்குதிரை, வெள்ளி பூத வாகனம், அன்னம், சேஷம், வெள்ளி யானை, வெள்ளி ஆட்டுக்கிடாய், பச்சைகுதிரை வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அருள்பாலிப்பர். முக்கிய நிகழ்வாக மார்ச் 26 இரவு 8:00 மணிக்கு வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி கைபார நிகழ்ச்சி, 29 ல் பச்சை குதிரை ஓட்டம், 31 ல் சூரசம்ஹார லீலை நடக்கிறது. ஏப்., 1 பட்டாபிஷேகம், 2ல் திருக்கல்யாணம், 3 ல் தேரோட்டம், 4ல் தீர்த்த உற்ஸவம் நடக்கிறது.