பதிவு செய்த நாள்
02
ஏப்
2018
01:04
கம்பைநல்லூர்: கம்பைநல்லூரில், பெண்கள் மட்டுமே, வடம் பிடித்து இழுத்த, சிவசுப்பிரமணியர் சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் சிவசுப்பிரமணியர் சுவாமி முருகன் கோவிலில், பங்குனி உத்திர திருத்தேர் விழா கடந்த, 26ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. 27ல், சுவாமி திருவீதி உலா, 30ல், பால்குடம் எடுத்தல், இடும்பன் பூஜை, சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான, பெண்கள் மட்டும் வடம் பிடித்து இழுக்கும் சிவசுப்பிரமணியர் சுவாமி தேரோட்டம் நேற்று நடந்தது. தேரை, 500க்கும் மேற்பட்ட பெண்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். செங்குந்தர் தெருவில் துவங்கிய தேரோட்டம், கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வந்து, இறுதியில் கோவில் அருகே தேர்நிலை நிறுத்தப்பட்டது.