பதிவு செய்த நாள்
03
ஏப்
2018
12:04
ஈரோடு: பிரசித்திபெற்ற பண்ணாரிஅம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சத்தியமங்கலம் அருகே அடர்ந்த வனப்பகுதியில், பிரசித்திபெற்ற பண்ணாரிஅம்மன் கோயிலில், குண்டம் திருவிழா ஆண்டுதோறும் பங்குனிமாதம் நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டைமாநிலமான கர்நாடக மாநிலத்திலிருந்தும் பக்தர்கள் வந்து குண்டத்தில் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு, திருவிழா கடந்த மாதம், 20 ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. அதனைதொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் திருவீதிஉலா சுற்றுவட்டார கிராமங்களுக்கு சென்று, மார்ச், 29 ம் தேதி இரவு, அம்மன் சப்பரம் கோயிலை வந்தடைந்தது. அன்றிரவு திருக்கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் தினமும் இரவு நித்தியப்படி பூஜையும், மலைவாழ்மக்களின் தாரை, தப்பட்டை, பீனாச்சி வாத்தியத்துடன் அம்மன் புகழ்பாடியபடி கிராமமக்கள் கம்பம் ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு குண்டத்திற்கு தேவையான எரிகரும்பு வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்று, குண்டத்திற்கு தேவையான வேம்பு மற்றும் ஊஞ்ச மரங்களை வெட்டி வந்து கோயிலின் முன்புள்ள குண்டத்தின் அருகே அடுக்கினர். இந்நிலையில், குண்டம் இறங்குவதற்கு வசதியாக, 20 கி.மீ நீளத்திற்கு கட்டப்பட்ட தடுப்புகளில், கடந்த ஒருவாரகாலமாக பக்தர்கள் காத்திருந்து, கோயில் வளாகத்தில் பக்தர்கள் தீச்சட்டி எடுத்தல், அலகு குத்தியும், வேல் எடுத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இந்நிலையில் நேற்று இரவு, 8:00 மணியளவில் குண்டத்தில் விறகுகள் அடுக்கப்பட்டு தீயிடப்பட்டது. இன்று அதிகாலை, 2:00 மணி முதல் ஊர்பெரியவர்கள் மூலம் சுமார், 10 அடி நீளம் 4 அடி அகலம் கொண்ட குண்டத்தை தயார் செய்தனர். இதைத்தொடர்ந்து, அதிகாலை 3:00 மணிக்கு வாத்தியங்கள் முழங்க, அம்மன் சப்பரம் கோயில் மேற்குப்பகுதியில் உள்ள தெப்பக்குளத்திற்கு சென்று, அம்மன் அழைப்பு நடைபெற்றது. இதனை தொடர்ந்து சரியாக, 3:45 மணிக்கு அம்மன் சப்பரம் மற்றும் படைக்கலத்துடன் குண்டத்தை வந்தடைந்தது. குண்டத்தை சுற்றி கற்பூரம் வைத்து சிறப்புபூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோயில் பூசாரிகள், பரம்பரை அறங்காவலர்கள், வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதிக்கப்பட்டனர். குண்டம் இறங்கும் பக்தர்கள், கோயிலுக்குள் சென்று அம்மனை தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டதால் பக்தர்கள் அம்மனை தரிசித்தபடி சென்றனர். இவ்விழாவில் சுமார், 1 இலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர்.