தேவாரம், பங்குனி பொங்கலை முன்னிட்டு கிராம கோயில்களில் திருவிழா களை கட்டியுள்ளது. அறுவடை முடிந்து கோடையை வரவேற்கும் விதமாக தேனி மாவட்டத்தில் உள்ள கிராம கோயில்களில் பங்குனி பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக முளைப்பாரி, கரகம், காவடி எடுத்தல், கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. கிராம பொதுக்கோயில்களிலும், சமூக கோயில்களிலும் நடக்கும் இந்த விழா சித்திரை முதல் தேதி மஞ்சள் நீராட்டத்துடன் நிறைவடையும். கோடை காலத்தில் சரும பிரச்னைகள் வராமல் தடுக்க வேப்பிலை, மஞ்சள் கலந்த தண்ணீர் ஊற்றி மஞ்சள் நீராடுவது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வந்தது. கால மாற்றத்தால் கலர் பொடிகள் பயன்படுத்தப்படுகிறது. பொங்கல் திருவிழாவிற்காக விரதம் இருக்கும் பக்தர்கள், அக்னி சட்டி நேர்த்திக்கடன் முடித்து கறி விருந்து நடத்துவதால், ஆட்டு கிடாக்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.