பதிவு செய்த நாள்
05
ஏப்
2018
03:04
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு: ஒழிந்தியாம்பட்டு அரசலீஸ்வரர்கோவில் குளத்தை துார்வாரி மேம்படுத்த, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அடுத்த ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில், திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலமான, அரசலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு, புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இங்கு, பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், சிவராத்திரி விழாக்கள் வெகு விமர்சையாக நடக்கும்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கோவில் எதிரில் உள்ள பெரிய குளத்து தண்ணீரை எடுத்து சாமிக்கு அபிஷேகம் செய்து வந்தனர். இந்நிலையில் குளம் பராமரிப்பின்றி, செடி, கொடிகள் மண்டியுள்ளதுடன், குளக்கரையை தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால், குளத்தின் பரப்பளவு குறைந்து, அதில் தேங்கியுள்ள தண்ணீரும் மாசடைந்து காணப்படுவதால், அதனை யாரும் பயன்படுத்துவதில்லை. குளத்து தண்ணீர் துார்நாற்றம் வீசுவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுளிக்கின்றனர்.எனவே, பக்தர்களின் வசதிகாக, அரசலீஸ்வரர் கோவில் குளத்தை துார்வாரி, மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.