பதிவு செய்த நாள்
05
ஏப்
2018
05:04
கொடுமுடி: தலையநல்லுார், பொன்காளியம்மன் கோவில் தேரோட்டத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீப்பந்தம் பிடித்து, அதன் வெளிச்சத்தில் தேரோட்டம் நடந்தது.
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே தலையநல்லுார் பொன்காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த, 27ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கடந்த, 4ல் பொங்கல் விழா நடந்தது. தொடர்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், சிவகிரி ஆதீனம் முன்னிலையில் நடந்தது. கோவிலுக்கு முன்பாக அலங்கரிக்கப்பட்டிருந்த சப்பரத்தில், அம்மன் எழுந்தருளினார். சிவகிரி, ஊஞ்சலுார், கரூர், திருப்பூர், கோவை, நாமக்கல் உள்பட பல பகுதிகளிலிருந்து பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள், தாங்கள் வைத்திருந்த தீப்பந்தங்களை பற்ற வைத்து, அம்மனுக்கு நேரே உயர பிடித்தனர். பின்னர், இருபுறமும் தீப்பந்த வெளிச்சத்திற்கு மத்தியில், பக்தர்கள் தோளில் சுமந்து சென்ற சப்பாரம் திருவீதி உலா நடந்தது. நாளை மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.