அனுப்பர்பாளையம்:வேலம்பாளையம் பிளேக் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது. திருப்பூரை அடுத்த, 15 வேலம்பாளையத்தில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா, கடந்த, 27ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. பிள்ளையார் பொங்கல் வைத்து படையலிடப்பட்டது.நேற்று முன்தினம் காலை, 6:00 மணிக்கு பிளேக் மாரியம்மனுக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பெண்கள் நுாற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்று, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, மாலை, 3:00 மணிக்கு, பிள்ளையார் கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்து வருதல்; இரவு, 8:00 மணிக்கு கம்பம் எடுத்து வந்து, கங்கையில் விடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை அபிஷேகம், மஞ்சள் நீர் உற்சவம் உள்ளிட்டவை நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் அறக்கட்டளை மற்றும் திருவிழா கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.