பதிவு செய்த நாள்
06
ஏப்
2018
11:04
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம், கோலாகலமாய் நேற்று நடந்தது. சிறப்பு அலங்காரத்தில், திருத்தேரில்எழுந்தருளி, நகரை வலம் வந்த அம்மனை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
உடுமலையில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. நேற்று காலை, 6:45 மணிக்கு மேல், சிறப்பு அலங்காரத்தில், மாரியம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார். கோவிலில் இருந்து தளி ரோடு சந்திப்பு வரை குவிந்திருந்த பக்தர்கள் கூட்டத்துக்கு நடுவே, திருத்தேர் அசைந்து அழகாய் வலம் வந்தது.தேரோட்டத்துக்கு உதவ, சேகரன் யானை, தேரின் பின்னே முட்டி தள்ள, திருத்தேர் முன்னே அசைந்து சென்றது. லாரிகளிலிருந்து, தேர் வலம் வரும் வீதிகளில், தண்ணீர் தெளிக்கப்பட்டது. பஞ்ச வாத்தியங்கள் முழங்க, பக்தர்கள், பரவசத்தோடு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். பொள்ளாச்சி ரோட்டில், துவங்கி, தளி ரோடு, குட்டை திடல், போலீஸ் ஸ்டேஷன் ரோடு, தலைகொண்டம்மன் கோவில், தங்கம்மாள் ஓடை வழியாக மீண்டும் மாலை, கோவிலை தேர் வந்தடைந்தது.தேரோட்டம் நடக்கும் வீதியெங்கும், திரண்டிருந்த பக்தர்கள் தேரோட்டத்தில் சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த அம்மனை, ஓம் சக்தி பராசக்தி என கோஷம் எழுப்பி வழிப்பட்டனர். பூ மற்றும் வாழைப் பழத்தை தேரின் மீது துாவி வழிபட்டனர். உடுமலை நகரமே விழாக் கோலமாய் காட்சியளித்தது. தேரோட்டம் நடக்கும் வீதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தேரோட்டத்தையொட்டி, நகருக்குள் வரும் பஸ்கள் வழிமாற்றி இயக்கப்பட்டன.கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில், ஆங்காங்கே, நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. கால்நடைத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி எம்.பி. மகேந்திரன், கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், செயல் அலுவலர் சங்கரசுந்தரேசுவரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.