தண்ணீர் பிரச்னையில் சிக்கித்தவிக்கும் மாவூற்று வேலப்பர் கோயில்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2018 11:04
ஆண்டிபட்டி: மலைப்பகுதியில் உள்ள வேலப்பர் கோயில் விழா துவங்கும் முன் தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த ராசக்காள்பட்டி ஊராட்சி, அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவூற்று வேலப்பர் கோயில் சித்திரை விழா ஏப். 14 ல் துவங்குகிறது. தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் முதல் நாளே கூடுவர். மலைப்பகுதியில் மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வந்த வற்றாத சுனை இந்த ஆண்டு வற்றி விட்டது. இதன் நீரே பக்தர்கள் குளிப்பதற்கும், குடிநீராகவும், சமையல் உட்பட மற்ற பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னையை எதிர்கொள்வது பெரிய சவாலாகவே இருக்கும். கோயில் அருகில் உள்ள கிணற்று நீர் மோட்டார் மூலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மலைப்பகுதியில் உள்ள கோயில் வளாகத்தில் இருந்து ஒரு கி.மீ., சுற்றளவில் வெளியூர் பக்தர்கள் தங்கி விடுவர். அனைவருக்கும் தண்ணீர் வசதி செய்து தருவது அவசியம். ஏற்கனவே குப்பை, பாலிதீன் கழிவுகள் பல மாதங்களாக குவிந்துள்ளது. விழா காலத்தில் குவியும் குப்பை சுகாதார பாதிப்புக்கு வழி ஏற்படுத்தி விடும்.
கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்ததாவது: விழாவின் முதல் நாளே தன்னார்வலர்கள் டேங்கர் லாரி மூலம் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்து விடுவர். பக்தர்கள் பயன்பாட்டிற்காக கோயில் வளாகத்தில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். விழா நாளில் கோயில் வளாகத்தில் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்க இந்த ஆண்டு நடைபாதையின் ஒரு பகுதியில் மட்டுமே கடைகளுக்கு அனுமதி வழங்கப்படும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசாருடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. அரசு சிறப்பு பேருந்துகளுக்கு தனி இடமும், தனியார் வாகனம், இரு சக்கர வாகனங்களுக்கு தனி இடமும் ஒதுக்கப்படும், என்றனர்.