பதிவு செய்த நாள்
06
ஏப்
2018
12:04
சேலம்: எல்லைப்பிடாரியம்மன் கோவில் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள், தீ மிதித்து வழிபட்டனர். சேலம், குமாரசாமிப்பட்டி, எல்லைப்பிடாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா, கடந்த, 27ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று, தீ மிதி விழா நடந்தது. இதையொட்டி, காலையில் அம்மன் திருக்கல்யாணம், சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை, சின்னதிருப்பதி பெருமாள் கோவிலிலிருந்து பூங்கரகம் மற்றும் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலையுடன், பக்தர்கள், கோவிலுக்கு ஊர்வலம் வந்தனர். அங்கு, அக்னி குண்டம் அமைக்கப்பட்டிருந்தது. அதில், பூசாரி முதலில் இறங்கி, அக்னியை கையால் அள்ளியெடுத்து, அம்மனுக்கு ஆராதனை நடத்தினார். தொடர்ந்து, பூங்கரகம், அம்மன் சிலை ஏந்தி வந்தவர்கள், ஆண்கள், பெண்கள், திருநங்கையர் உள்பட, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர், குழந்தைகளுடன் தீ மிதித்தனர். இன்று பால்குட ஊர்வலம், சங்கு பூஜை உள்ளிட்டவை நடக்கிறது.
* உத்தமசோழபுரம், அரியானூர், வீரபாண்டி மாரியம்மன் கோவில்களின் பங்குனி திருவிழா, கடந்த, 21ல் தொடங்கியது. நேற்று, பொங்கல் வைபவம் நடந்தது. அதில், திரளான பக்தர்கள், குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து, ஆடு, கோழிகளை பலியிட்டு, பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.
* இடைப்பாடி அருகே, காவேரிப்பட்டி, ஓங்காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா, கடந்த, 22ல் தொடங்கியது. அதில் நேற்று நடந்த தீ மிதி விழாவில், ஏராளமானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
* இளம்பிள்ளை, ஏரிக்கரை, மாரியம்மன், காளியம்மன் கோவில்களின் பங்குனி திருவிழா, கடந்த, 31ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு, சர்வ அலங்காரத்தில், அம்மன் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து, வடம் பூட்டி, தேரை பக்தர்கள் நகர்த்தி வைத்தனர். நேற்று காலை, 8:30 மணிக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஓம்சக்தி, பராசக்தி கோஷம் முழங்க, வடம் பிடித்து இழுத்து, முக்கிய வீதிகள் வழியாக வந்து, மீண்டும் கோவிலை அடைந்தனர்.