பதிவு செய்த நாள்
06
ஏப்
2018
12:04
சேலம்: ஜோடுகுழியில், 100 ஆண்டுகளுக்கு பின் கப்பரை எடுக்கும் திருவிழா நடந்தது. அதில், கல்லூரி மாணவர், பூசாரியாக தேர்வு செய்யப்பட்டார். தீவட்டிப்பட்டி, குண்டுக்கல் அடுத்த ஜோடுகுழியில், ஓம்காளியம்மன் கோவில் உள்ளது. பூசாரி மாரியப்பன் இறந்து, 10 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், 30க்கும் மேற்பட்டோர், போட்டி போட்டு பூஜை செய்து வந்தனர். அவர்களுக்குள் பிரச்னை ஏற்படும் சூழல் உருவானதால், ஊர்பெரியவர்கள் கூடி ஆலோசித்தனர். முடிவில், சமூக வழக்கப்படி, 100 ஆண்டுகளுக்கு முன், பூசாரியை தேர்வு செய்ய பின்பற்றிய, கப்பரை திருவிழா நடத்த முடிவு செய்தனர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு, கோவில் வளாகத்தில், கப்பரை தயார் செய்யப்பட்டது. அதில், பக்தர்கள் ?ஹாமம் வளர்க்க பயன்படுத்தும் பொருட்களை போட்டு எரித்தனர். நேற்று காலை, 4:00 மணிக்கு அருள்வாக்கு மூலம் பூசாரி தேர்வு துவங்கியது. 30க்கும் மேற்பட்டோர் உடலில் சந்தனம், குங்குமம் பூசி, மாலை அணிந்து பங்கேற்றனர். ஜோடுகுழியை சேர்ந்த மகேந்திரன் மகன் கிருபானந்தன், 23, அருள் வந்து ஆடினார். தீவட்டிப்பட்டி, தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் அவரிடம், ஊர் பெரியவர்கள், ஐந்து கேள்விகளை எழுப்பினர். சரியாக பதிலளித்துவிட்டு, ஐந்து இடங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எலுமிச்சம்பழம் உள்ளிட்ட பொருட்களை எடுத்துவந்து, பெரியவர்களிடம் கொடுத்தார். பின், கப்பரை எடுத்து, கோவிலை மூன்று முறை வலம்வந்து, அம்மன் சன்னதியில் வைத்தார். இதையடுத்து, பூசாரியாக கிருபானந்தன் தேர்வு செய்யப்பட்டார்.