சிவகங்கை, சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி நேற்று பொங்கல் விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.கோயில் விழா மார்ச் 29 இரவு கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
தினமும் இரவு 10:00 மணிக்கு சிம்மம், குதிரை, காமதேனு, அன்னம், பூத வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்தது. நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தனர். அக்னி சட்டி, மாவிளக்கு, கரும்புதொட்டில், ஆயிரம் கண் பானை எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தன.இன்று (ஏப்., 6) இரவு 7:30 மணிக்கு மின்னொளி தேரோட்டம் நடக்கிறது. நாளை (ஏப்., 7) காலை 7:45 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 6:15 மணிக்கு அம்மன் ஊஞ்சல் உற்ஸவமும், இரவு 10:25 மணிக்கு புஷ்பப் பல்லக்கு நிகழ்ச்சியும் நடக்கின்றன. ஏப்., 8 இரவு 7:30 மணிக்கு தீர்த்தவாரி உற்ஸவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.