அவிநாசி: கருவலுார் மாரியம்மன் கோவில் திருவிழாவில், நேற்று இரண்டாம் நாள் தேரோட்டம் கோலாகமாக நடந்தது. அவிநாசியை அடுத்த கருவலுாரில் உள்ள மாரியம்மன் கோவில், மிகவும் பிரசித்தி பெற்றது. கோவிலில், பங்குனி தேர்த்திருவிழா, 31ம் தேதி துவங்கியது. திருவிழாவில், நேற்று முன்தினம் காலை திருத்தேருக்கு மாரியம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அன்று மாலை, பக்தர்கள் சரணகோஷம் முழங்க திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. தேர் நிலையிலிருந்து புறப்பட்ட அம்மன் தேர், முதல் நிலையான சொர்க்க வாசல் சென்று சேர்ந்தது. மீண்டும் இரண்டாம் நாள் தேரோட்ட நிகழ்வு நேற்று மாலை நடந்தது. முதல் நிலையிலிருந்து இரண்டாம் நிலையான மேற்கு ரத வீதி வரை தேர் பவனி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, தேர் வடம் பிடித்து அம்மனை வழிபட்டனர். இன்று மாலை, தேரோட்டத்தின் மூன்றாம் நாளில், இரண்டாம் நிலையிலிருந்து தேர்நிலைக்கு திருத்தேர் நிலை சேர்கிறது. நாளை, பரிவேட்டை மற்றும் தெப்போற்சவம் நடக்கவுள்ளது.