பதிவு செய்த நாள்
07
ஏப்
2018
12:04
ஈரோடு: ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில்களில், கம்பம் பிடுங்கும் விழா இன்று நடக்கிறது. இதனால், மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு பெரியமாரியம்மன் வகையறா கோவில்கள் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களில் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா நடந்தது.
எஸ்.பி., அறிக்கை: கோவில்களில் தேரோட்டம் முடிந்த நிலையில், விழா முக்கிய நிகழ்வான கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி இன்று மதியம், 3:00 மணிக்கு நடக்கிறது. மூன்று கோவில் கம்பங்கள், ஒரே நேரத்தில் பிடுங்கப்பட்டு, மணிக்கூண்டு பகுதியில் ஒன்று சேர்க்கப்படும். அங்கிருந்து ஊர்வலமாக, ஈஸ்வரன் கோவில் வீதி, காமராஜ் வீதி, பிரப்ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை, மேட்டூர் ரோடு, ஸ்வஸ்திக் ரவுண்டானா, சத்தி ரோடு, எல்லை மாரியம்மன் கோவில், நேதாஜி ரோடு, மணிக்கூண்டு, பெரியர் வீதி, மரப்பாலம், மண்டபம் வீதி, கச்சேரி வீதி, வழியாக காரை வாய்க்காலில் விடப்படுகிறது. இதனால் ஈரோட்டில், இன்று பிற்பகல், 2:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, எஸ்.பி., சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: சேலம், திருச்செங்கோடு, நாமக்கல் ஆகிய இடங்களில் இருந்து பள்ளிபாளையம் வழியாக, ஈரோடு வரும் வாகனங்கள், காவிரி ரோடு, கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை வழியாக திருநகர் காலனி வந்து வ.உ.சி. பார்க் பின்புறம், பயணிகளை இறக்கிவிட்டு திரும்பவும் காவிரி ரோடு வழியாக செல்ல வேண்டும். கோபி, சத்தி பகுதி வாகனங்கள் லோட்டஸ் ஷோரூம் அருகில், பயணிகளை இறக்கி விட வேண்டும். வீரபத்திர இரண்டாவது வீதி வழியாக திரும்பி வீரபத்திர முதல் வீதி வழியாக சத்தி ரோட்டை அடைய வேண்டும். பவானி, அந்தியூர் பகுதி வாகனங்கள், அசோசியேஷன் பெட்ரோல் பங்க் அருகில் பயணிகளை இறக்கி விட்டு, திரும்பி செல்ல வேண்டும். திருச்செங்கோடு, நாமக்கல், சேலம் ஆகிய இடங்களில் இருந்து, ஈரோடு வழியாக கோவை செல்லும், கனரக சரக்கு வாகனங்கள், காவிரி ரோடு, திருநகர் காலனி அசோசியேஷன் பெட்ரோல் பங்க், வீரபத்திர வீதி, வீரப்பன் சத்திரம், கனிராவுத்தர் குளம், சித்தோடு வழியாக செல்ல வேண்டும்.
கோவை மார்க்க வாகனம்: கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து, பெருந்துறை வழியாக வரும் வாகனங்கள், பெருந்துறை ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை வலது புறம் திரும்பி, ஈரோடு அரசு ஆஸ்பத்திரி அருகில் பயணிகளை இறக்கி விட்டு, பழனியப்பா தெரு, ராமசாமி தெரு, புளூடார்ட் வழியாக பெருந்துறை செல்ல வேண்டும். தாராபுரம், காங்கேயம், கொடுமுடி, கரூர், திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் காளை மாட்டு சிலை, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, ஈ.வி.என்.ரோடு வழியாக, பெரியார் நகர் மேற்குபுறம் ஆர்ச் பகுதியில் பயணிகளை இறக்கி விட்டு, மீண்டும் பயணிகளை ஏற்றிக்கொண்டு பெரியார் நகர் கிழக்கு ஆர்ச் வழியாக, காந்திஜி ரோடு காளை மாட்டு சிலை வழியாக திரும்பி செல்ல வேண்டும்.
சரக்கு வாகனங்கள்: கோவையிலிருந்து ஈரோடு வழியாக திருச்செங்கோடு, சேலம், நாமக்கல் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள், பெருந்துறை ரோடு, வீரப்பம்பாளையம் பிரிவு வழியாக நசியனூர் ரோடு வில்லரசம்பட்டி நால் ரோடு சென்று, அங்கிருந்து கனிராவுத்தர்குளம், வீரப்பன்சத்திரம், 16 நம்பர் ரோடு வழியாக பள்ளிபாளையம் வழியாக செல்ல வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர்கள், கம்பம் வரும் வழிகளை தவிர்த்து, மாற்று வழிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் எஸ்.பி., தெரிவித்துள்ளார்.