பதிவு செய்த நாள்
07
ஏப்
2018
12:04
சூணாம்பேடு:வில்லிப்பாக்கம் கிராம விவசாய நிலத்தில், பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது.சூணாம்பேட்டிலிருந்து வெண்ணாங்குப்பட்டு செல்லும் சாலையில் உள்ளது, வில்லிப்பாக்கம். இக்கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன், தனக்கு சொந்தமான நிலத்தில் மண்டியிருந்த புதரை, இரு நாட்களாக சீரமைத்து வந்தார். நேற்று, ஜே.சி.பி., இயந்திரத்தை வைத்து சீரமைக்கும் போது, இயந்திர பற்களில், சாக்கு மூட்டை சிக்கியது. அதை பிரித்து பார்த்த போது, பாதுகாப்பாக சுற்றி வைக்கப்பட்ட பெருமாள் சிலை இருந்தது.சுமார், 40 கிலோ எடையும், 2.5 அடி உயரமும் இருந்த அந்த வெண்கலச் சிலை குறித்து, சூணாம்பேடு போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து கிராம நிர்வாக அலுவலர், சிலையை கைப்பற்றி, செய்யூர் வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர்.ஆய்வுக்கு பின் தான், சிலை பற்றிய விபரங்கள் தெரியும் என, வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.