பதிவு செய்த நாள்
07
ஏப்
2018
05:04
ஈரோடு: பெரிய மாரியம்மன் கோவில், கம்பம் ஊர்வலத்தால், மஞ்சள் மாநகரான ஈரோடு, மஞ்சள் நீரால் குளித்தது. ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம் தேர்த்திருவிழா நடந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியான, கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.
மதியம், 3:05 மணிக்கு, பெரிய மாரியம்மன் கோவில் கம்பம் எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் கம்பங்கள் எடுக்கப்பட்டன. மூன்று கோவில் கம்பங்களும், ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மணிக்கூண்டு பகுதியில் ஒன்று சேர்ந்தது. அதன்பின், ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக, ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்துாரி அரங்கநாதர் கோவில் முன், கொண்டு வரப்பட்டு, கம்பங்களை தோளில் சுமந்து, பூசாரிகள் ஆடினர். அதன் பின் காமராஜர் ரோடு, பிரப் ரோடு, எம்.ஜி.ஆர்., சிலை, மேட்டூர் ரோடு, பஸ் ஸ்டாண்ட், சத்தி ரோடு, எல்லை மாரியம்மன் கோவில் வீதி, மணிக்கூண்டு, கச்சேரி வீதி வழியாக, காரை வாய்க்காலை இரவில் அடைந்தது.கம்பம் ஊர்வலத்தின் போது, வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், கம்பங்களின் மீது, உப்பு, மிளகு கலந்து துாவி வழிபாடு செய்தனர்.
கம்பம் எடுத்தவுடன், மாநகரில் உள்ள அனைத்து வீதிகளிலும், பொதுமக்கள், சிறுவர், சிறுமியர், பெண்கள், இளைஞர்கள் என, அனைவரும், ஜாதி, சமய, பேதங்களை கடந்து, ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை தெளித்து, சந்தோஷம், ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். ஊர்வலத்தில் பலர், நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், பல்வேறு வேடமிட்டு வந்தனர். விழாவை கொண்டாடும் வகையில், அனைத்து நிறுவனங்கள், கடைகளுக்கு ஈரோட்டில் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. மொத்தத்தில் மஞ்சள் நீராட்டத்தால், மாநகம் மஞ்சளில் குளித்தது.