பதிவு செய்த நாள்
09
ஏப்
2018
12:04
உடுமலை: உடுமலை, மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி வாணவேடிக்கை கோலாகலமாக நடந்தது. உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த மாதம் 20ம்தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. ஏப்., 5ம் தேதி தேரோட்டம் நடந்தது. தேரோட்டத்தை அடுத்து, நேற்றுமுன்தினம், காலை, 8:00 மணிக்கு மாரியம்மன் சுவாமிகளுடன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இரவு, 8:00 மணிக்கு அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் பரிவேட்டைக்கு செல்லும் வைபவம் துவங்கியது. பின்னர், உச்சிமாகாளியம்மன் கோவில், சத்திரம் வீதி, சுந்தரமூர்த்தி விநாயகர் கோவில், காந்தி சதுக்கம் மாலை அம்மன் கோவில், பள்ளி வாசல் வீதி காமாட்சியம்மன் கோவில்களில் மண்டகப்படி நடந்தது. தொடர்ந்து, இரவு, 10:00 மணிக்கு அம்மன் குட்டைத்திடலை வந்தடைந்தார். வாணவேடிக்கை, இரவு, 10:30 மணிக்கு துவங்கி, 11:30 மணி வரை நடந்தது.
பல்வேறு வண்ணங்களிலும் வானில் வெடிக்கும் பட்டாசுகள், பார்வையாளர்களை கவர்ந்தன. பல்வேறு பகுதிகளிலிருந்தும், மக்கள் திரண்டிருந்து வாணவேடிக்கையை கண்டு ரசித்தனர். நேற்று, திருவிழாவின் நிறைவாக, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. காலை, 10:30 மணிக்கு கொடி இறக்கப்பட்டு, காலை, 11:00 மணிக்கு மகாபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, பகல், 12:30 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. மாலையில், சிறப்பு அலங்காரத்துடன் புஷ்ப பல்லக்கில் அம்மன் திருவீதி உலா நடந்தது.