பதிவு செய்த நாள்
09
ஏப்
2018
01:04
திருத்தணி: திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில், நேற்று நடந்த தீமிதி திருவிழாவில், 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். திருத்தணி, காந்தி நகரில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், , 22ம் தேதி, கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா துவங்கியது. தினமும், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், உற்சவர் அம்மன் ஊர்வலம், மதியம் மகாபாரத சொற்பொழிவு மற்றும் இரவு நாடகம் ஆகியவை நடந்து வந்தது. நேற்று, காலை, 9:30 மணிக்கு, துரியோதனன் படுகளம் நடந்தது. தொடர்ந்து, நுாற்றுக்கணக்கான பெண்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் திரவுபதியம்மன் சிறப்பு அலங்காரத்தில், முக்கிய வீதிகள் வழியாக பூ கரகத்துடன் ஊர்வலமாக அக்னி குண்டம் அருகே வந்து எழுந்தருளினார். பின், 5,000க்கும் மேற்பட்டோர், காப்பு கட்டி விரதம் இருந்த குண்டத்தில் இறங்கி, தீ மிதித்தனர். அப்போது, அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என, பக்தி முழக்கமிட்டனர். இரவு, 8:00 மணிக்கு, உற்சவர் அம்மன் வீதியுலா நடந்தது. இன்று காலை, 11:00 மணிக்கு, தர்மர் பட்டாபிஷேகம் நடக்கிறது.