பதிவு செய்த நாள்
09
ஏப்
2018
01:04
ஈரோடு: ஈரோடு பெரிய, மாரியம்மன் கோவில் திருவிழாவில், 10 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். ஈரோடு, பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோவில்களான, சின்ன மாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் மிகவும் பாரம்பரியம் மிக்கவை. பங்குனி மாதத்தில், இக் கோவில்களில், குண்டம் தேர்த்திருவிழா தொன்று தொட்டு நடக்கிறது. பூச்சாட்டுதல் தொடங்கி, கம்பம் ஊர்வலம் வரை, ஈரோடு மாநகரே களை கட்டும். நடப்பாண்டு விழா, வழக்கமான உற்சாகத்துடன் நடந்து முடிந்துள்ளது.
இதுகுறித்து பெரியமாரியம்மன் கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன் கூறியதாவது: ஈரோடு பெரியமாரியம்மன் கோவிலில், புனரமைப்பு முடிந்து நடக்கும், முதல் விழா இது. மார்ச், 20ல் பூச்சாட்டு நடந்தது. மார்ச், 24ல் கம்பங்கள் நடப்பட்டன. இதையடுத்து நாள் தோறும், கோவில்களுக்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. கம்பத்துக்கு புனித நீர் ஊற்றியும், பூங்கரகம் சுமந்தும், அக்னிச்சட்டி ஏந்தியும், மக்கள் மட்டுமின்றி, பல்வேறு அமைப்பினர், சங்கத்தினரும் வந்தனர். விழா தொடங்கி கடந்த, 20 நாட்களில், பத்து லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். கோவிலில் இட பற்றாக்குறையால், கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. அதிகரிக்கும் பக்தர்களால், வரும் ஆண்டுகளில் மேலும் இட பற்றாக்குறை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. கோவில் முகப்பை மறைத்து, விளம்பர பேனர் வைத்து மறைத்ததாக, புகார் எழுந்தது. அடுத்த ஆண்டுகளில் இது போன்ற, தவறுகள் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.