பதிவு செய்த நாள்
10
ஏப்
2018
10:04
திருநெல்வேலி: குற்றாலம் குற்றாலநாதர் கோவிலில், சித்திரை விஷு திருவிழா தேரோட்டம் நடந்தது. திருநெல்வேலி மாவட்டம், குற்றாலம், குற்றாலநாதர் கோவிலில் சித்திரை திருவிழா, 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனையும் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலாவும் நடந்தன. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. விநாயகர், முருகன், குற்றாலநாதர், குழல்வாய் மொழியம்மை ஆகியோர், நான்கு திருத்தேர்களில் எழுந்தருளினர். மேளதாளம் முழங்க, தேரோட்டம் நடந்தது. திரளான பக்தர்கள், வடம் பிடித்தனர். நாளை, 11ம் தேதி காலையும், இரவும் நடராஜமூர்த்திக்கு தாண்டவ தீபாராதனையும், 12-ம் தேதி சித்திர சபையில், நடராஜமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி, தாண்டவ தீபாராதனையும் நடக்கிறது. 14-ம் தேதி, சித்திரை விஷு தீர்த்தவாரி நிகழ்ச்சியோடு விழா நிறைவு பெறுகிறது.