பதிவு செய்த நாள்
10
ஏப்
2018
11:04
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், உருத்திர கோட்டீஸ்வரர் கோவிலில், கும்பாபிஷேகத்திற்கான ராஜகோபுர திருப்பணிகள் நடக்கின்றன. விருப்பமுள்ளோர் பணமாகவோ, பொருட்களாகவோ வழங்கலாம் என, கேட்டுகொள்ளப்பட்டுள்ளது.
திருக்கழுக்குன்றத்தில், நான்கு வேதங்கள் போற்றும் கோவிலாக வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. சமயகுரவர்கள் நால்வரால் பாடல் பெற்ற இப்பகுதியில், மற்றொரு பழமையான, அறநிலையத் துறை நிர்வகிக்கும் உருத்திரகோட்டீஸ்வரர் கோவில் உள்ளது.இங்கு, பிரதோஷம், சஷ்டி, கார்த்திகை தீபம், பங்குனி உத்திரம் ஆகியவை, விமரிசையாக நடக்கின்றன. இக்கோவிலின் ராஜகோபுரத்தில் செடி கொடிகள் வளர்ந்து, பழுது அடைந்து காணப்பட்டது.இது குறித்து, கடந்த மே மாதம், நமது நாளிதழில் விரிவான படங்களுடன் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் உபயதாரர்கள் ஆலோசித்து, கோவிலில் திருப்பணிகள் செய்ய முடிவு எடுத்தனர்.பாலாலய பூஜையை தொடர்ந்து, ராஜகோபுர திருப்பணிகள், தற்போது தீவிரமாக நடக்கின்றன. போதிய நிதி ஆதாரம் இல்லை.உபயதாரர்கள் துவக்கியுள்ள இத்திருப்பணிக்கு, விருப்பமுள்ள பக்தர்கள், பணம் மற்றும் கட்டுமான பொருட்களை நன்கொடை ஆக வழங்கலாம்.நன்கொடை அளிக்க விரும்புவோர், வேதகிரீஸ்வரர் கோவில் செயல் அலுவலரை, 9946 89735 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.