பதிவு செய்த நாள்
10
ஏப்
2018
11:04
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேசுவரர் கோவிலில், திருஞானசம்பந்தர் இறைபணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளையினர், உழவாரப்பணி செய்தனர். காஞ்சிபுரத்தில் உள்ள திருஞானசம்பந்தர் இறைப்பணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளை, 11 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இக்குழுவினர், ஒவ்வொரு மாதமும், இரண்டாவது ஞாயிற்றுக்கிழமைகளில், சைவ, வைணவ கோவில்களுக்கு சென்று உழவாரப்பணி செய்து வருகின்றனர்.அந்த வகையில், இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான, காஞ்சிபுரம் பஞ்சுபேட்டையில் உள்ள ஓணகாந்தேசுவரர் கோவில் குளத்தில், நேற்று முன்தினம் உழவாரப்பணி மேற்கொண்டனர்.குளத்தில் மண்டி கிடந்த புதர்கள், முட்செடிகளை அகற்றினர். முன்னதாக, உழவாரப்பணி துவங்கும் முன், காலையில், விநாயகருக்கு பூஜை செய்தனர். மாலையில், மூலவருக்கு அபிஷேகம் செய்தனர்.அரிசி ஆலை அத்துமீறல்ஓணகாந்தேசுவரர் கோவில் தெப்ப குளத்தில், தனியார் அரிசி ஆலையின் கழிவுநீர் கலக்கிறது. இதனால், மழை பெய்து குளத்தில் தண்ணீர் தேங்கினாலும், அரிசி ஆலை கழிவுநீரால், குளத்து நீர் மாசுபடும் சூழல் உள்ளது. எனவே, ஆலை கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்த, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.