பதிவு செய்த நாள்
10
ஏப்
2018
12:04
மோகனூர்: வாழவந்தி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், 2,500க்கும் மேற்பட்ட பக்தர்கள், குண்டம் இறங்கி, வேண்டுதலை நிறைவேற்றினர். மோகனூர் அடுத்த, எஸ்.வாழவந்தியில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. 18 பட்டிகளுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில், 2013ல் இரு தரப்பினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தொடர்ந்து, நான்காண்டுகளாக, திருவிழா தடைபட்டது. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், இந்தாண்டு விழா, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும், காவிரி ஆற்றுக்கு சென்ற பக்தர்கள், புனித நீராடி தீர்த்தக்குடம் எடுத்து வந்து, கோவில் முன் நடப்பட்டுள்ள கம்பத்துக்கு ஊற்றி வழிபாடு செய்தனர். நேற்று முன்தினம் இரவு, வடிசோறு வைத்து அம்மனுக்கு படையல் வைக்கப்பட்டது. நேற்று, அதிகாலை, 5:00 மணிக்கு, யாகம் வார்த்து தீக்குண்டம் பற்ற வைக்கப்பட்டது. தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து, அலகு குத்தி, அங்க பிரதட்சணம் செய்து, நேர்த்திக்கடன் செலுத்தினர். மதியம், 1:00 மணிக்கு, 2,500க்கும் மேற்பட்ட பக்தர்கள், கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி, வேண்டுதலை நிறைவேற்றினர். இன்று காலை, 6:00 மணிக்கு கிடாவெட்டு, மாலை, 4:00 மணிக்கு, தேர் திருவீதி உலா, நாளை அதிகாலை, 5:00 மணிக்கு, கம்பம் பிடுங்கி சிங்காரப்பாழியில் விடப்படுகிறது. அதையடுத்து, மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.