பதிவு செய்த நாள்
10
ஏப்
2018
12:04
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின் சித்திரை பெருவிழா, 20ல் துவங்குவதை ஒட்டி, தேர்கள் சீரமைப்பு துவங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் புகழ்பெற்ற வேதகிரீஸ்வரர் கோவில் உள்ளது. பல்லவர் காலத்து கோவிலாக வேதகிரீஸ்வரர் கோவிலும், சோழர் காலத்து கோவிலாக பக்தவச்சலேஸ்வரர் கோவிலும் உள்ளன. திருவண்ணாமலையை போல, மாதம் தோறும் கிரிவலம் நடைபெறுவதால், பல பகுதியிலிருந்து பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. ஆண்டு தோறும் நடைபெறும் சித்திரை பெருவிழா, இந்தாண்டு, 20ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது. பிரதான விழாவாக, 22ல் வெள்ளி அதிகார நந்தி மற்றும் 63 நாயன்மார்கள் மலைவலம் உற்சவமும், 26ல் பஞ்சரத உற்சவமும் நடைபெற உள்ளது. இதற்காக, ஐந்து தேர்களின் சீரமைப்பு பணிகளை, அறநிலைத் துறையினர் துவங்கியுள்ளனர். தாழக்கோவில் எதிரே நிறுத்தப்பட்டிருந்த தேர்களின் இரும்பு தகர மேற்கூரைகள் அகற்றப்பட்டுள்ளன. மர சுதை சிற்பம் சரிசெய்தல், கிரீஸ் அடித்தல் என, பல பணிகளை மேற்கொள்கின்றனர்.
விழாக்களின் விபரம்
ஏப்., 20: காலை, 6:30 மணி, பல்லக்கு; இரவு, 9:00 மணி, புண்ணியகோடி விமானம், பஞ்சமூர்த்திகள் உற்சவம்
21: காலை, 9:00 மணி, பவழக்கால் சப்பரம்; இரவு, 9:00 மணி, பூதவாகனம்
22: காலை, 6:00 மணி, வெள்ளி அதிகார நந்தி, 63 நாயன்மார்கள் மலை வலம்; இரவு, 9:00 மணி, சந்திர பிரபை உற்சவம்
23: காலை, 8:00 மணி, புருஷா மிருகம்; இரவு, 10:00 மணி, நாக வாகனம்
24: காலை, 8:00 மணி, கதலி விருட்சம்; இரவு, 10:00 மணி, வெள்ளி ரிஷப வாகனம், மயில் வாகனம்
25: காலை, 8:00 மணி, விமானம்; இரவு 9:00 மணி, யானை வாகனம்
26: காலை, 6:00 மணி, பஞ்சரத வீதி உலா உற்சவம்; இரவு, 8:00 மணி தந்தத்தொட்டி
27: காலை, 8:00 மணி, தந்தத்தொட்டி; இரவு, 9:00 மணி, குதிரை வாகனம்
28: காலை, 8:00 மணி, தந்தத்தொட்டி; மாலை, 4:30 மணி, பிஷாடனர்; இரவு, 9:00 மணி, அலங்கார விமானம்
29: காலை, 11:00 மணி, சபாநாயகர் சூரியபிரபை ரிஷப தீர்த்த தீர்த்தவாரி; மாலை, 3:00 மணி, பஞ்சமூர்த்திகள் தொட்டி உற்சவம், சங்குதீர்த்த தீர்த்தவாரி; இரவு, 9:00 மணி, ராவணேஸ்வர வாகன மலைவலம், துவஜா அவரோஹணம்
30: இரவு, 9:00 மணி, பஞ்சமூர்த்திகள் உச்சிகால மகா அபிஷேகம், நுாதன விமானம், பந்தம்பறி உற்சவம்.