பதிவு செய்த நாள்
10
ஏப்
2018
05:04
காங்கேயம்: ‘சிவன்மலை ஆண்டவர் உத்தரவு பெட்டியில், அருகம்புல், மிளகு, கீழா நெல்லிவேர் வைக்கப்பட்டுள்ளதால், இயற்கை மருத்துவம் தழைத்தோங்கும்’ என, சிவாச்சாரியார் ஒருவர் கூறினார்.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே, சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டியில் வைத்து பூஜிக்கப்படும் பொருள், சமுதாயத்தில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, பக்தர்கள் நம்பிக்கையாக உள்ளது. பெட்டியில் வைக்கும் பொருளை, பக்தர்கள் கனவில் சுப்பிரமணியசுவாமி தெரிவிப்பார். அந்தப் பொருளுடன், பக்தர்கள் கோவிலுக்கு செல்வர். சன்னதியில் பூ வாக்கு கேட்டு உறுதி செய்தபிறகு, பெட்டியில் வைக்கப்பட்டு வழிபடுவது, தொன்று தொட்ட வழக்கமாக உள்ளது. கடந்த ஜன., 6 முதல் கணக்கு நோட்டு வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று முதல், அருகம்புல், மிளகு, கீழாநெல்லி வேர் வைத்து பூஜை செய்யப்படுகிறது. திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில், சேனாபதிகிராமம், மயில்ரங்கத்தை சேர்ந்த சென்னிமலை, 57, என்ற பக்தர் கனவில், இப்பொருட்களை வைக்க ஆண்டவர் உத்தரவு கிடைத்துள்ளது.
இதுகுறித்து கோவில் சிவாச்சாரியர் ஒருவர் கூறியதாவது: அருகம்புல், மூலிகைக்கு தேவையானது. கீழாநெல்லி வேர் காமாலைக்கு மருந்து. மிளகு நாட்டு வைத்தியத்துக்கு உகந்தது. இதன் மூலம், இயற்கை வைத்தியம் அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பொருளும், தாக்கமும்...! : ஆண்டவன் உத்தரவு பெட்டியில், 2015 அக்.,10ல் கணக்கு நோட்டு இடம் பெற்றது. அப்போது மத்திய அரசு, கறுப்பு பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்தது. அதுதொடர்பான சட்டங்களை கொண்டு வந்தது. 2017, ஜன.,10ல் இரும்பு சங்கிலி வைக்கப்பட்டது. இதனால் சட்டத்தை மீறி சொத்து சேர்த்தவர்கள் சிக்கினர். உதாரணமாக சசிகலா உள்ளிட்டோர் தண்டனை பெற்றனர். கடந்த காலங்களில் துப்பாக்கி வைத்தபோது கார்கில் போரும், மணல் வைத்த போது, மணலுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டது.
பக்தர் சொல்வது என்ன?: பூஜைப் பொருள் தந்த பக்தர் சென்னிமலை கூறியதாவது: அமாவாசை தோறும், சிவன்மலை கோவிலுக்கு செல்வேன். ஆறு மாதங்களாக செல்லவில்லை. நேற்று முன்தினம் இரவு கனவில் தோன்றிய, சிவன்மலை முருகன், ‘என் சன்னதியில் உள்ள பெட்டியில், அருகம்புல், மிளகு, கீழாநெல்லிவேர் வை’ என்றார். அதன்படி கோவிலுக்கு சென்று அந்த பொருட்களை தந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.