பதிவு செய்த நாள்
11
ஏப்
2018
10:04
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே, கோவில் விழாவில் தண்ணீரில் விளக்கேற்றி, வழிபாடு நடத்தினர். நாமக்கல் மாவட்டம், தட்டான்குட்டையில், பச்சை தண்ணி மாரியம்மன் கோவில் உள்ளது. 8ம் தேதி, பூச்சாட்டுதலுடன், பங்குனி திருவிழா துவங்கியது.நேற்று காலை பூசாரிகள், கோவில் கிணற்றிலிருந்து புனித நீர் எடுத்து வந்தனர். பின், ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த விளக்கில் இருந்த எண்ணெய்யை கீழே கொட்டி, தண்ணீரால் நிரப்பி, விளக்கேற்றி வழிபாடு செய்தனர். தொடர்ந்து, மலர் அலங்காரத்தில் இருந்த அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று, பக்தர்களுக்கு சாட்டையடி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, குண்டம் இறங்கும் விழா, மாலை மஞ்சள் நீராட்டு விழா நடக்கவுள்ளது.