பதிவு செய்த நாள்
11
ஏப்
2018
10:04
திருநெல்வேலி: திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவில் திருப்பணிகள் ஆகம விதிப்படியே நடந்துள்ளன என, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், பரஞ்ஜோதி கூறினார்.
திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதியம்மன் கோவிலில், வரும் 27ம் தேதி, கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்நிலையில், கோவிலில் ஆகமவிதிகள் படி கும்பாபிஷேக திருப்பணிகள் நடக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன.இது தொடர்பாக, அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி கூறியதாவது:நெல்லையப்பர் கோவிலில், 150க்கும் மேற்பட்ட திருப்பணிகள், 4.92 கோடி ரூபாய் செலவில் உபயதாரர்களால் நேரடியாக நடந்துள்ளன. 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. வரும் 20ம் தேதிக்குள் திருப்பணிகள் முடியும். திருப்பணிகளில் எவ்வித அவசரமும் காட்டவில்லை. ஆகம விதிகளையும் மீறவில்லை. இதுதொடர்பாக தவறான தகவல்களை சிலர் பரப்புகின்றனர். கோவிலின் மேற்கு பிரகார திருப்பணிகளை நிறைவேற்ற, ஆறு மாத காலம் ஆகும். அப்பணிகளை முடித்து கும்பாபிஷேகத்தை நடத்தினால், பல ஆண்டுகளாக நடக்கும் ஆனித் தேரோட்டம் தடைபடும். எனவே தான், அத்திருப்பணிகளை மட்டும் மேற்கொள்ளாமல் கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது.ஆகம முறைப்படியே, 27ம் தேதி கும்பாபிஷேக நேரமும் காலை, 9:30 மணி முதல், 10:25 ஆக மாற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோவிலில், நெல்லையப்பர் சுயம்பு வடிவாக காட்சியளிக்கிறார். சுயம்பு லிங்கத்திற்கு ஆகமம் கிடையாது. காந்திமதியம்மன் கோவிலில், காமிக ஆகம முறைப்படி பூஜை காரியங்கள் நடந்து வருகிறது.