பதிவு செய்த நாள்
11
ஏப்
2018
11:04
ஸ்ரீபெரும்புதுார்: ஸ்ரீபெரும்புதுாரில், ஸ்ரீராமானுஜரின், 1001ம் ஆண்டு அவதார விழா நாளை துவங்குகிறது. ஸ்ரீபெரும்புதுாரில், 1017ம் ஆண்டு அவதரித்தவர் வைணவ மகான் ராமானுஜர். இவர், தானுகந்த திருமேனியாக ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டு தோறும் சித்திரை மாதம், திருவாதிரை நட்சத்திரம் அன்று, ராமானு ஜரின் திருஅவதார உற்சவ விழா கொண்டாடப் படுகிறது. இந்தாண்டு, ராமானுஜரின், 1001ம் ஆண்டு திரு அவதார உற்சவ விழா, இன்று துவங்கி, 10 நாட்கள் விமரிசையாக நடைபெற உள்ளது. இதில், பல மாநிலங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஸ்ரீபெரும்புதுார் சென்று ராமானுஜரை வழிபட உள்ளனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
ராமானுஜர் 1001ம் ஆண்டு உற்சவ விபரம்:
* ஏப்.,12- காலை, தங்கப்பல்லக்கு, மாலை, மங்களகிரி
* ஏப்.,13- காலை, பல்லக்கு, மாலை, யாளி வாகனம்
* ஏப்.,14- காலை, பல்லக்கு, மாலை, மங்களகிரி
* ஏப்.,15- காலை, சிம்ம வாகனம், மாலை, மங்களகிரி
* ஏப்.,16- காலை, பல்லக்கு, மாலை, ஹம்சவாகனம்
* ஏப்.,17- காலை, வெள்ளை சாத்துபடி, குதிரை வாகனம், குரேசவிஜயம், மாலை, மங்களகிரி
* ஏப்.,18- காலை, சூர்ய பிரபை, மாலை, சந்திர பிரபை
* ஏப்.,19- காலை, திருமந்திரார்த்தம், சேஷவாகனம், மாலை, யானை வாகனம்
* ஏப்.,20- காலை, திருத்தேர், மாலை, புஷ்ப பல்லக்கு
* ஏப்.,21- காலை, சாத்து முறை, தங்கப்பல்லக்கு, இரவு, மங்களகிரி
* ஏப்.,22- காலை, கந்தபொடி வசந்தம்.
ராமானுஜருக்கு மணி மண்டபம் ஸ்ரீபெரும்புதுாரில் அமையுமா?: தமிழக சுற்றுலா துறை திட்டமிட்டபடி, ஸ்ரீபெரும்புதுாரில், ஸ்ரீராமானுஜருக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்கின்றனர். ஸ்ரீபெரும்புதுார் பேருந்து நிலையம் அருகே, கோவிலுக்கு சொந்தமாக, 2.70 ஏக்கர் நிலத்தில் மணி மண்டபம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டது. அந்த இடத்தில், தமிழக சுற்றுலா துறை சார்பில், 6 கோடி ரூபாய் மதிப்பில், மணி மண்டபம், நுாலகம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதனால், ராமானுஜரின் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆயிரமாவது ஆண்டு விழா என்பதால், கடந்த ஆண்டு பணிகள் துவங்கும் என, பக்தர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், ஓராண்டு கடந்த நிலையிலும், மணிமண்டபம் அமைக்கும் பணி எள்ளவும் துவங்கவில்லை. இதனால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர். ராமானுஜரின், 1001ம் ஆண்டு அவதார விழா இன்று துவங்க உள்ளது. எனவே, சுற்றுலா துறை திட்டமிட்டபடி, ஸ்ரீபெரும்புதுாரில், ராமானுஜருக்கு மணி மண்டபம் அமைக்கும் பணிகளை, இந்த நாளில் அறிவிக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.