பதிவு செய்த நாள்
11
ஏப்
2018
11:04
மாமல்லபுரம்: ஸ்தலசயன பெருமாள் கோவில், பழைய தேரில் உள்ள சிற்பங்கள், கடத்தி விற்கப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லையென தெரிய வந்துள்ளது. மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ கோவில்களில், 63ம் கோவில். இக்கோவில் சித்திரை பிரம்மோற்சவம், பூதத்தாழ்வார் அவதார உற்சவத்தில், சுவாமி திருத்தேரில் வீதியுலா செல்வது குறிப்பிடத்தக்கது. கடந்த, 2010ல், கமல வடிவ புதிய மரத்தேர் தயாரித்து, பயன்படுத்தப்படுகிறது.
30 ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்திய சிறிய தேர் எரிந்தது. தீயில் பாதிக்காத துவார பாலகர்கள், குதிரைகள் உள்ளிட்ட சிலைகள், ஆண்டுதோறும் வண்ணம் தீட்டி புதுப்பித்து, புதிய தேரில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், பழைய தேரின் சிற்பங்கள், கோவிலின் ஐம்பொன் காண்டாமணி உள்ளிட்டவை, கோவில் ஊழியர்களால், கடத்தி விற்கப்பட்டதாக, நேற்று தவறான செய்தி பரவியது; பக்தர்கள் கொந்தளித்தனர். இதுகுறித்து விசாரித்த போது, அது தவறான தகவல் என்பது உறுதியானது. இதுகுறித்து, செயல் அலுவலர், எஸ்.சங்கர் கூறும் போது, பிரம்மோற்சவம் நடக்கவுள்ள நிலையில், இதுபோன்ற அவதுாறு பரவியது வேதனை அளிக்கிறது. பழைய தேரின் சிற்பங்கள் கோவிலில் உள்ளன. அவதுாறு பரப்பியவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்போம், என்றார்.